Friday, March 05, 2010

மட்டையடி உற்சவம் - நாகை

பொங்கல் அன்று நாகை ஸ்ரீ செளந்தர்யராஜ பெருமாள் கோவில் சென்ற போது நாளை மாலை மட்டையடி உற்சவம் உள்ளது தவறாமல் வந்து விடுங்கள் என்று கூற, ஏதோ ஒரு பதிவில் இதை பற்றி படித்தும், இது ஸ்ரீரங்கத்தில் மட்டும் தான் நடைபெறும் என்று நினைத்துக் கொண்டு இருந்ததும் ஞாபகத்தில் வந்தது. வீட்டில் இதை பற்றி கேட்கும் போது இவ்வளவு நாளாக இங்கு இருக்கிறாய், இது கூடவா தெரியாது என்று நம் அறியாமையை பதம் பார்த்த காரணத்தால் அதன் புராண கதையை கேட்க முடியாமல் போயிற்று. சரி எப்படியும் நாளை மாலை இந்த உற்சவத்தை தவறாமல் கண்டு விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

இதை பற்றிய புராணக் கதை மிக தெளிவாக அறியாத காரணத்தால் எனக்கு தெரிந்தவற்றை மட்டும் இங்கு. துலக்க நாச்சியார் காண நம்பெருமாள் சென்ற காரணத்தால் கோவம் கொண்டு தாயார் மீண்டும் வீட்டின் உள்ளே அனுமதிக்க மறுப்பதே இந்த மட்டையடி உற்சவத்தின் சாரம்சம். வாழை மட்டை கொண்டு அடிக்கப்படுகிறது. அழ்வார் வந்து சாமாதனம் செய்வதாகவும் தெரிகிறது.

மாலை நான் சிறிது தாமாதமாக சென்ற காரணத்தால் முழுமையாக காண முடியவில்லை. படங்களும் சரியாக அமையவில்லை. சலனப்படம் சிறிதே எடுக்க முடிந்தது.

நம்பெருமாள் துலக்க நாச்சியாரை காண செல்லும் புகைப்படம்


கோவிலுக்குள் செல்ல முயலும் புகைப்படம்


மட்டையடி கொடுத்து வாயில் மூடப்படும் புகைப்படம்


தாயாரும், நம்பெருமாள் இணைந்து காட்சி கொடுக்கும் புகைப்படம்


மேலே உள்ள படத்தில் மட்டையடி உற்சவத்தை பற்றிய புராண கதையை கோவில் பட்டாச்சாரியார்கள் விளக்கும் காட்சியையும் காணலாம்.

சலனப்படம்



புராணங்கள் எப்படி இருந்தாலும், இந்த உற்சவத்தை கோவில் அங்கத்தினர்கள் நடத்திய பாங்கு என்னை மிகவும் கவர்ந்தது, அத்தனை அழகு. ஒரு ஒழுங்குடன், மிகவும் நேர்த்தியாக அமைந்தது இருந்தது. திருநாகை அழகியாருக்கு நடந்த இந்த உற்சவம் ஒரு அழகியல் நிகழ்வு என்பதால் தான் இந்த பதிவு.

ஸ்ரீரங்க மட்டையடி உற்சவத்தை பற்றி மாதவிபந்தலில் வந்த பதிவு.

Thursday, March 04, 2010

ஹைத்தி - பூகம்பம்

ஏற்கனவே உணவு பஞ்சத்தாலும், உள்நாட்டு பிரச்சனைகளாலும், தொடர்ந்து அடித்த கடும் புயலாலும் (Hurricane) அவதிப்பட்டு வந்த ஹைத்தி, எட்டு வாரங்களுக்கு முன்பு ஏற்பட்டு கடுமையான பூகம்பத்தால் மிகவும் நிலைகுலைந்து போய் உள்ளது. என்னுடன் வேலை நண்பர்களின் நிலை அறியவே சில நாட்கள் பிடித்தது. இன்னுமும் அவர்கள் தங்க இடம் இல்லாமல் அலுவலக வளாகத்தில் தான் தங்கி வருகிறார்கள். எனக்கு கிடைத்த தகவல்படி ஒரே ஒரு இந்தியர் (என்னுடைய பழைய கம்பெனியில் தற்பொழுது வேலை செய்தவராம்) இடிபாடுகளில் சிக்கி இறந்து உள்ளார். வடமாநிலத்தை சேர்ந்தவர் அவர். அவர் குடும்பத்திற்கு உதவி தொகை அளிக்க மற்ற நண்பர்கள் முயன்று கொண்டு உள்ளார்கள். அதே போல் இங்கு இருந்தும் ஹைத்திக்கு பணம் திரட்டி அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார்கள். திரட்டும் பணி கிட்டதட்ட முடிந்து விட்டது, விரைவில் அனுப்பட்டும்.

உலகின் பல பகுதிகளில் இருந்து நிவாரணம் ஹைத்தி நாட்டிற்கு குவிந்த போதிலும் இன்னும் நிலைமை மோசமாக தான் உள்ளது அங்கு. ஐ.நா.வும், அதன் துணை அமைப்புகளும், பல தொண்டு நிறுவனங்களும் துரிதமாக செயல்பட்டதால் இடிபாடுகளில் சிக்கி இருந்த பலரின் உயிர்கள் காக்கப்பட்டது. போதுமான மருத்துவமனை வசதிகள் இல்லாதது தான் மிக பெரிய இடராக அங்கு இப்பொழுது நிலவி வருகிறது.

ஐ.நா, ஹைத்தி அரசு, உலக வங்கி, ஐரோப்பிய அமைப்பு ஆகியவற்றின் உதவியோடு மறுகட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இது வரை கிட்டதட்ட 40 % மக்கள் (5 லட்சம்) தற்காலிக குடியிருப்புகள் பெற்று உள்ளார்கள். இன்னும் 2.5 லட்சம் தார்பாய்கள் மற்றும் 25000 டெண்ட் வழங்குவதற்காக பணிகள் நடந்துக் கொண்டு இருக்கின்றது. கிட்டதட்ட 15 லட்சம் மக்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டு கொண்டு இருக்கின்றது.

விரைவில் மழை காலம் நெருங்குவதால் அதற்கு முன்பு தற்காலிக குடியிருப்புகளை அமைக்கப்பட வேண்டும் என்பது தான் தற்பொழுது இருக்கும் சவால். இது வரை தொற்று நோய்கள் ஏதுவும் பெரும் அளவில் பரவாமல் இருப்பது ஒரு வரம்.

ஹைத்தியில் இருந்த அலுவலக தலைமையகம், பூகம்பத்திற்கு முன்பு


பூகம்பத்திற்கு பின்பு


We are the World 25 - Haiti

25 வருடங்களுக்கு முன்பு மைக்கேல் ஜாக்சனால் ஆப்பிக்க நாடுகளுக்காக நிதி திரட்ட நடத்தப்பட்ட We are the World பாடல் மீண்டும் 80 இசை கலைஞர்களால் 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் அதை ரீக்கார்ட் செய்து உள்ளார்கள். ஹைத்தி நிவாரண நிதிக்காக இதை செய்து உள்ளார்கள். இதில் நம் ரஹ்மானின் பங்களிப்பு உண்டு. அந்த பாடல்....



மனம் இருப்பவர்கள் ஹைத்தி மக்களுக்கு தங்களால் முடிந்த உதவியை செய்யலாம். WFP மூலம் உதவ விரும்புவர்கள் இந்த சுட்டியை தொடரவும். WHO மூலம் உதவு இந்த சுட்டியை தொடரவும்.

வசந்தம் விரைவில் வீசட்டும்.

Wednesday, March 03, 2010

வாழ்க சனநாயகம் - 8

இந்த வாரத்தில் மட்டும்.....

திவிவேதி

கல்கி பகவான்

ஸ்ரீ நித்தியானந்த சுவாமிகள்....


இவங்கள் வரிசையில் இன்னும் பலரை விரைவில் எதிர்பாக்கலாம்.

மதத்தின் போர்வையில் இவர்கள் இதை எல்லாம் செய்வதால் இவற்றை தோலுரித்து காட்டுவதில் தவறே இல்லை.

வீட்டில் இருக்கும் பெற்றோர்களை கூட மதிக்காத பல ஜென்மங்கள் இந்த மாதிரி ஆட்களின் காலில் போய் விழுவது தான் கொடுமை. எதை திண்ணா பித்தம் தெளியும் அலையுறாங்க. அரசியல் வியாதிகளை விட்டு விடுவோம். அவர்கள் எவன்/ள் காலில் வேணுமானாலும் விழுவார்கள். செக்கு மாட்டுக்கு சிவன் என்ன? செக்கு என்ன? அவர்களுக்கு காரியம் ஆனால் சரி.

இனிமேல் ஆச்சம் மனுசனை சக மனிதனாக மட்டும் பாருங்கள்...

பழமொழி:

துள்ளாதே துள்ளாதே குள்ளா, பக்கத்தில் பள்ளம் அடா !

கமெண்ட் :

இந்த ஆள் எப்படி மாட்டினான் இப்போ? - பின்ன அரச குடும்பத்து ஆட்களுக்கு வைக்கும் கட் அவுட் டை விட பெரிய அளவில் கட் அவுட் வைத்தால் பாத்துக்கிட்டு சும்மாவா இருப்பாங்க?

கேள்விகள் ?

1, நித்தியானந்தர்கள், தேவநாதன்கள் லீலைகள் போன்றவற்றை மட்டும் அடிக்கடி அட்டைப் படங்களாக போட்டு விளம்பரப்படுத்தி விற்பனை அதிகரித்து கொள்ளும் பத்திரிக்கைகள் (அதிலும் தேவநாதனுக்கு ப்லோஃ அப் எல்லாம் பண்ணுறாங்கப்பா), அவர்கள் துறையை சார்ந்தவர்கள் எரித்து கொள்ளப்பட்டத்தை பற்றி பெரிதாக கண்டு கொள்ளவில்லையே, அது ஏன்? அடிப்பாங்கனா?

2, இது போன்ற செய்திகளை படித்தவுடன் மக்கள் அல்லது அவர்களை பின்பற்றியவர்கள் உடனே திரண்டு போய் அவர்கள் உடமைகளை அடித்து நொறுக்குவது, செருப்பால் அடிப்பது, கோஷங்கள் எழுப்பது, நீதிமன்றங்கள் வரை சென்று அடிப்பது என்று செய்கிறார்களே, இதுக்கே இவ்வளவு செய்கிறவர்கள் தர்மபூரி மாணவர்கள், தினகரன் பத்திரிக்கை ஊழியர்களை எரித்தவர்கள் நீதிமன்றங்களுக்கு வரும் போது இதை எல்லாம் செய்வது இல்லையே. அது ஏன்? பயமா?.........

நல்லா இருங்கடே.... வாழ்க சனநாயகம்

Saturday, February 27, 2010

சிதறல்கள்

இந்த வருட ரயில்வே பட்ஜெட் அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்திற்கு பல திட்டங்கள் உள்ளதால் சிறந்த பட்ஜெட்டாக பார்க்கப்படுகிறது. திட்டங்கள் எல்லாம் சரி தான் ஆனால் அதை செயல்படுத்துவதில் தான் வேகத்தை காணாம். இந்த வருடம் மார்ச் மாதத்திற்குள் போன பட்ஜெட் டில் அறிவிக்கப்பட்ட புதிய ரயில், விரிவாக்கம் போன்றவை செயல்படுத்தப்படும் என்று தெரிவித்து உள்ளார்கள். இதற்கு மட்டும் இவ்வளவு கால தாமதம். ஆனால் நேற்று அறிவிக்கப்பட்ட பெட்ரோல், டீசல் வரி மட்டும் உடனடியாக அமல்படுத்தப்பட்டது. என்னங்கடா நியாயம் இது.

*******

போன வருடம் எங்கள் ஊருக்கு ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுனு எர்ணாக்குளம் - திருச்சி விரைவு வண்டியை நாகூர் வரை நீட்டித்து இருந்தார்கள். இன்னும் வந்த பாடு இல்லை. மார்ச் இறுதி வரை பொறுத்து இருப்போம். இந்த வருடம் நாகூர் - காரைக்கால் ரெயில்வே திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. விரைவில் திட்டம் நிறைவேற இறைவனை பிராத்திப்பதை தவிர வேறு ஒன்றும் செய்வதற்கு இல்லை. கூடிய மட்டும் சென்னைக்கு விரைந்து ரயிலை விட்டால் இந்த பகுதிக்கு வந்து போகும் பலரும் உங்களை வாழ்த்துவார்கள். கொஞ்சம் பாருங்கடா கண்ணா!

*******

போன வருடம் தனியார் வசமிடம் ரெயில்வே க்கு சொந்தமான இடங்களை லீஸ் க்கு விடுவதாக அறிவித்து இருந்தார்கள். இந்த வருடம் தனியார் மயம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்கிறார்கள். அதற்கும் இதற்கும் ஏதும் சம்பந்தம் உண்டா? அப்படி இல்லை என்றால் போன வருடம் அறிவித்தப்படி லீஸ் க்கு விடப்பட்டதா? இந்த விபரங்களை எங்கு தெரிந்து கொள்வது. இணையத்தில் நான் தேடிய வரையில் எனக்கு ஏதும் கிட்ட வில்லை. விபரம் அறிந்தவர்கள் தெரியப்படுத்த வேண்டுகிறேன்.

*******

இந்திய பட்ஜெட் டை பற்றி நேற்று நண்பர்களுடன் கலந்துரையாடும் போதும், பட்ஜெட் எல்லாம் எங்க நாட்டில் நல்லா தான் போடுவாங்க, அதில் 50 % ஆச்சும் குறித்த காலத்தில் நிறைவேற்றினால் எங்கள் நாட்டின் வளர்ச்சி நன்றாக இருக்கும், ஆனால் அது தான் நடப்பது இல்லை என்று சொன்னேன். நண்பர்கள் பலர், நீங்கள் எவ்வளவோ பரவாயில்லை திடமான அரசு என்று ஒன்று இருந்து, திட்டங்கள் போட்டு அதை குறித்த நேரத்தில் நிறைவேற்றுவதை பற்றி கவலைப்பட்டு கொண்டு இருக்கின்றீர்கள். எங்கள் நிலைமை எல்லாம் படு மோசம் என்று சொன்னார்கள். சொன்னவர்கள் - பாகிஸ்தான், கென்யா, ஜிம்ப்பாவே. உண்மை !!! இக்கரைக்கு அக்கரை பச்சை!

*******

நேற்று மாலை வண்டியில் வரும் போது விண்ணைத்தாண்டி வருவாயா பாடல்கள் ஒடிக் கொண்டு இருந்தது. ரூவாண்டன் நண்பன், இந்த பாடலுக்கு இசை ராமன் தானே என்று கேட்க, இல்லை எனக் கூறினேன். இல்லை இல்லை. இது அவன் இசை போல் தான் உள்ளது. A... R... R..A...M...A...N என்று உச்சரிக்க அப்பொழுது தான் எனக்கு புரிந்தது அவன் நம் ரஹ்மானை சொல்கின்றான் என்று. ரஹ்மானே தான் உனக்கு எப்படி தெரியும் என்றால் ஆஸ்கர், கிராமி அவார்ட்ஸ் வாங்கி இருக்கான், இவனை தெரியாதா எனக் கேட்க அப்பொழுது தான் அந்த விருதுகளுக்கு எந்த அளவு உலக அளவில் வீச்சு உள்ளது என்பதை அறிய முடிந்தது. பாடிக் கொண்டு இருந்த பாடல் - அன்பில் அவன். இந்த படத்தின் பாடல்களை காப்பி செய்து வாங்கி சென்றான். மற்ற படங்களை சி.டி. யில் போட்டு கேட்டு உள்ளான். (அவனை பொருத்தவரை ஆல்பம்) ஹும்ம்ம் Once again HATS OFF RAHMAN. சில பாடலகள் மட்டும் Close to Heart என்று சொல்ல முடியும், அது போல் இந்த படத்தில் வரும் மன்னிப்பாயா, அன்பில் அவன் இரண்டும் அந்த வகையில் உள்ளது.

*******

ரசித்தவை:

வா ங் கி க் கொ ள் வே ன்

by நெல்லை கண்ணன்

இருக்கின்ற விருதெல்லாம் எனக்கே தாரும்
எனை விட்டால் இதற்கெல்லாம் யார் தான் உள்ளார்
படுப்பதற்கு விருது எழுந்து நின்று
பார்ப்பதற்கு ஒரு விருது நாட்டை நன்கு
கெடுப்பதற்கு விருது மேலும் என்னவெல்லாம்
கிளர்ச்சி தரும் விருதுகளோ அவற்றையெல்லாம்
தடுப்பதற்கு யார் உள்ளார் யாரும் இல்லை
தந்து கொண்டே இரும் நானும் வாங்கிக் கொள்வேன்