உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு இதை உரக்க சொல்வோம் உலகுக்கு
இனம் ஒன்றாக மொழி வென்றாக ஒரு வேலை எடுப்போம் விடிவுக்கு
நம் வெற்றி பாதையில் நரிகள் வந்தால் விருந்து வைப்போம் விண்ணுக்கு
பிறந்த பிள்ளை நடந்து பழக கையில் வேலை குடுப்போம்
பிறந்த குழந்தை இறந்து பிறந்தால் வாளால் கீறி புதைப்போம்
யுத்தம் சத்தம் கேட்டால் போதும் முத்த சத்தம் முடிப்போம்
ரத்த குளத்தை நிரப்பி நிரப்பி வெற்றி தாமரை பறிப்போம்
பாட்டு எல்லாம் நல்லா எழுதுறாங்க நம்ம ஆளுங்க. ஆனா பாருங்க யுத்த சத்தம் கேட்டவுடன் ஈழத் தமிழர்களுக்காக பொங்கிட்டு இருந்த நம் மக்கள் முத்த சத்தம் வந்தவுடன் யுத்த சத்தத்தை சிறிதே மறந்து கொண்டாட்ட மூடுக்கு வந்துட்டாங்க போல. இது நமக்கு என்ன புதுசா என்ன. மும்பை தாக்குதலை தொடர்ந்து இந்தியாவே ஒரு சோக நிலையில் ஆங்கில புத்தாண்டை எதிர்கொண்டால் சென்னையில் ஆட்டம் என்ன பாட்டம் என்னனு அசத்தின ஆளுங்க ஆச்சே நாம, இப்ப மட்டும் சும்மா விடுவோமா என்ன. வலைப்பதிவில் ஆரம்பிச்சு வார இதழ்கள் வரை ஏதுவும் மிஞ்சம் வைக்காமல் தடபுடலாக காதலர் தினத்தை கொண்டாடியாச்சு. அதிலும் ஒரு பத்திரிக்கையில் எந்த அசம்பாவிதமும் இல்லாமல் காதலர் தினம் முடிந்ததுனு செய்தி வேற. ஏன்ய்யா காதலர் தினம் என்ன சுகந்திர தினமா இல்லை குடியரசு தினமா... இன்னும் போனா வரலாறு காணாத பாதுகாப்பு வேற போடுவீங்க போல. இந்தியா இலங்கையில் சென்று கிரிக்கெட் ஆடியதை மன்னிக்க முடியாத குற்றமாக தெரிந்த நமக்கு இதை மட்டும் கொண்டாட முடிகிறது. என்னத்த சொல்ல.
அது போகட்டும் ஈழம் என்னாச்சு, ஜனாதிபதியின் வார்த்தை ஆறுதல் அளிக்கிறது, அய்யோடா தேர்தல் நேரத்தில் இப்படியாகி போச்சே எப்படி சமாளிப்பதுனு டில்லி பயணம் என்று அரசியல்வாதிகள் ஒரு பக்கம் பிச்சுக்கிட்டு போக நம் மக்களும் காதலர் தின வாழ்த்துக்கள், பிங்க் ஜட்டி னு தடம் புரண்டு திசை திரும்பிட்டுடாங்க. அடுத்து சிதம்பரம் கோவில், பட்ஜெட்
னு நூல் பிடிச்சு இனி நாடாளுமன்ற தேர்தலில் முழு கவனத்தையும் திருப்பிடுவாங்க. அங்க அவங்க நிலைமை எப்பொழுதும் போல திரிசங்கு நிலைமை தான்.
இதே நிலைமை தான் உலக அளவிலும். இந்தியா தேர்தலுக்கு என்பதை விட திருவிழாவிற்கு தயாராகி விட்டது, திருவிழா முடியும் வரை எதுவும் அவர்கள் காதில் விழாது. அத்வானி ஈழ தமிழர் ஆதரவு எந்த வகையிலும் தற்ச்சமயம் பயன் அளிக்க போவது இல்லை. உலக நாடுகளுக்கு தற்போதைய கவலை எல்லாம் காசா, ஆப்கான், பாகிஸ்தான், ஈராக், சோமாலியா, சூடான், ஜிம்பாவே, காங்கோ போன்ற நாடுகளின் மீது தான் உள்ளது.
ஏன் இலங்கை மேல் உலக நாடுகளோ, ஐ.நா.வோ இது வரை மிகவும் கண்டிப்புடன் நடந்து கொள்ளவில்லை என்பது தான் எனக்கு புரியாத புதிராக இருக்கு. அங்கு நடக்கும் இன படுகொலைகளின் எண்ணிக்கை பெரிய அளவில் இல்லை என்று அவர்கள் நினைக்கின்றார்களோ என்னவோ? ஒரு வேளை இலங்கை ஆப்பரிக்க கண்டத்தில் இருந்து இருந்தாலோ எண்ணெய் போன்ற இயற்கை வளங்கள் கொண்டு இருந்தால் ஏதும் நடவடிக்கை எடுத்து இருப்பார்களோ என்னவோ?
ஐ.நா. வும் ஏதோ சொல்லனும் என்ற காரணத்திற்காக சிவிலியன் யாரும் பாதிக்கப்பட கூடாது என இரு தரப்பிறக்கும் ஒரு வேண்டுகோளை வைத்து அமைதியாகி விட்டது. ஐ.நா.வின் தற்போதைய கவலை எல்லாம் சூடானின் டார்பூர் மீது தான் உள்ளது. அந்த நாட்டின் ஜனாதிபதிக்கு ஐ.சி.சி. அரெஸ்ட் வாரண்ட் குடுக்குமா குடுக்காதா? அப்படி கொடுத்தால் சூடானில் நடந்து வரும் அமைதி பேச்சுவார்த்தைகள் என்ன ஆகுமோ அதை எப்படி சமாளிப்பது என்று தான் உள்ளது.
WFP காட்டு கத்து கத்திக் கொண்டு இருக்கிறது, போரினால் பாதிக்கப்பட்டு மக்கள் உணவு இல்லாமல் தவிக்கிறார்கள். அவர்களுக்கு உணவு கொண்டு செல்ல இரண்டு வாரமாக முயற்சி செய்தும் முடியவில்லை என்று. கேட்கதான் நாதியில்லை.இந்நிலையில் கப்பல் மூலமாக உணவு பொருட்கள் செஞ்சிலுவை சங்கம் மூலமாக அனுப்படும் என்று இலங்கை அரசு தெரிவித்து உள்ளது. காயம்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை தொடர்வதாக ஐ.சி.ஆர்.சி. கவலை தெரிவித்து உள்ளது. யுனிசெப் விடுதலை புலிகள் சிறுவர்களை படையில் சேர்த்து வருவதாக கவலை தெரிவித்து உள்ளது. இப்படி எல்லாரும் மாற்றி மாற்றி கவலை மட்டும் தான் தெரிவிக்குறாங்க. அதை களைய எந்த முயற்சியும் எடுக்கவில்லை அல்லது முடியவில்லை என்பது தான் சோகம்.
விடுதலை புலிகள் மற்ற சமயங்களை போல் இந்த தடவை உக்கிரமான பதில் தாக்குதல் கொடுக்காமல் தற்காப்புக்கில் ஈடுப்பட்டது, உலக நாடுகள் மூலம் இலங்கை அரசுக்கு மிக கடுமையான கண்டனம் வரும் அதை வைத்து உலக நாடுகளின் நல்லுறவும் மீண்டும் கிட்டும் என்ற எண்ணத்தில் தான் போர் மரபுகளை மீறாமல் சண்டையிட்டு வந்ததாக நான் கருதுகிறேன். துரதிஷ்டவசமாக அவர்கள் எண்ணம் ஈடேறாத காரணத்தால் அவர்கள் மீண்டும் கொரில்லா யுத்தத்தில் இறங்கி விட்டார்கள். ஆளும் கூட்டணிக்கு இடைத்தேர்தலில் கொடுத்த வெற்றி இலங்கை ராணுவத்தை இன்னும் படுபாதக செயல்களை செய்ய தூண்ட வைக்கும் என்ற நிலையில் விடுதலை புலிகளின் நிலையை குறை சொல்ல முடியாத நிலைமைக்கு கொண்டு செல்கிறது. ஆனால் புலிகளின் தற்கொலை தாக்குதல்கள் இலங்கை அரசால் மிக பெரிய அளவில் உலக மீடியாவில் பதிவு செய்கிறது. ஆனால் இலங்கை ராணுவத்தினர் செய்யும் இனப்படுகொலைகள் அந்த அளவில் உலக மீடியாவில் பதிவு செய்யபட வில்லை.
வேற என்ன தான் வழி! ஐ.நா.வும், உலக நாடுகளும் தான். அவர்களை விட்டால் வேற வழி இல்லை. அவர்களோ இந்தியாவோ மனது வைத்தால் ஒழிய அங்கு ஒரு நிரந்திர தீர்வு ஏற்படுவது வெறும் கனவாகவே இருக்கும். அது வரை விடுதலை புலிகள் தக்க ஆயுத பலத்தோடும், மக்கள் ஆதரவோடும் இருக்க வேண்டியும் மிக முக்கியம். அதை விடுத்து ஆயுத போராட்டத்தின் மூலம் தீர்வு கிடைக்கும் என்று அதே ஜல்லியை அடித்தால் இதே நிலைமை தான் என்றும் தொடரும். விடுதலை புலிகள் போய் வேறு ஒரு அமைப்பு, ராஜபாக்சே போய் வேறு ஒரு ஜனாதிபதி. இது வரை நடந்த கொடூரம் போதும் உலக நாடுகளின் காதிலும், ஐ.நா.வின் காதிலும் ஊதி கொண்டே இருப்பது தான் இப்பொழுது நம் முன் இருக்கும் ஒரே வழி. அதற்கு ஈழ தமிழர்களும், விடுதலை புலிகளும் மற்ற தமிழர்களும் தொடர்ந்து முயல வேண்டும் வெற்றி கிடைக்கும் வரை முயற்சிக்க வேண்டும்.