Showing posts with label நிகழ்வுகள். Show all posts
Showing posts with label நிகழ்வுகள். Show all posts

Saturday, January 07, 2012

வேகம் ரொம்ப முக்கியம்

நம்ம தருமி அவர்கள் பதிவை தொடர்ந்து

சாலை பாதுகாப்பு என்றால் அதற்கு முழுக்க முழுக்க வாகன ஓட்டுனர்கள் பொறுப்பு ஏற்க வேண்டும் என்றே நம்மில் பலர் எண்ணுகிறோம். எந்த வாகனம் என்பது முக்கியமில்லை நடப்பவர்களுக்கு சைக்கிள், சைக்கிளில் செல்பவர்களுக்கு பைக், பைக்கிற்கு ஆட்டோ, ஆட்டோவிற்கு கார், கார் க்கு பஸ், பஸ்க்கு லாரி என எந்த வாகனம் பெரிதோ அதன் மேல் தான் தவறு இருக்கும், அவர்கள் சரியாக நடந்தால் எந்த பிரச்சனையும் இல்லை என்று பரவலாக ஒரு எண்ணம் உண்டு. இதில் தவறு என்றே நான் சொல்லவில்லை. அவர்கள் மீது எந்த அளவிற்கு தவறு உண்டோ, அதே அளவிற்கு மற்றவர்களின் மீது தவறு உண்டு. இதற்கு மிக சிறிய உதாரணமாக இரு புகைப்படங்களை இணைத்து உள்ளேன். அதை பார்த்து விட்டு மற்றவற்றை பேசுவோம்.



இடம் : கிழக்கு கடற்கரை சாலை. திருத்துறைப்பூண்டி - முத்துப்பேட்டை வழி

அவர்கள் காலம் காலமாக வாழ்ந்து வந்த இடங்களில் ஒரு நாளைக்கு மிக சொற்பமாக மட்டுமே வாகனங்கள் அப்பகுதியை கடந்த காலம் போய், இப்போது நெடுஞ்சாலைகள் வந்து வாகனங்கள் மின்னல் வேகத்தில் செல்வது அவர்கள் குற்றம் அல்ல தான். ஆனால் முன்பு இருந்த அதே ஞாபகத்தில் ஏதோ ஒரு நினைப்பில் சாலைகளை கடப்பதும், குழந்தைகளை கவனிப்பின்றி விடுவதும், ஆடு மாடுகளை சாலைகளில் கட்டி போடுவதும் மிக அபாயகரமான விசயம். இதனால் ஏற்படும் பாதிப்பை முன் கூட்டி உணர்ந்து கவனமாக இருப்பது தான் நன்மைபயக்கும் விசயம். அதை விடுத்து கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் ஆகவே ஆகாது.

அது போக நடைப்பயணமாக செல்பவர்கள் குறிப்பாக ஆன்மிக பயணம் செல்பவர்கள் முடிந்த அளவு சாலையின் ஒரமாக நடந்து செல்லுங்கள். குறுகிய பாதைகளில் இன்னும் கவனம் தேவை. இரவு நேரங்களிலும் நடப்பதை தவிர்க்கவும். குறிப்பாக சாலையில் போதிய வெளிச்சம் இல்லாத போது. அப்படியே நடக்க நேர்ந்தாலும், Reflector உடுப்புகளை பயன்படுத்துங்கள். சாலைகளில் அமந்து உணவு உட்கொள்வது, ஒய்வு எடுப்பது போன்றவற்றை கண்டிப்பாக தவிர்க்கவும்.


இரு சக்கர வாகன ஓட்டுபவர்கள் சாலையில் ஒரமாக செல்வது ரொம்ப ரொம்ப முக்கியமான விசயம். நாம் மட்டும் சாலையில் பயணிக்கவில்லை நமக்கு பின்பும் பலர் வருவார்கள் என்ற எண்ணம் தேவை. போய் கொண்டு இருக்கும் போதே எந்த ஒரு சைகையும் செய்யாமல் திடீர் என திரும்பவது, யூ டர்ன் எடுப்பது ரொம்பவே ஆபத்தமான விசயம். அதே போல் வண்டி ஓட்டும் போது குறிப்பாக நெடுஞ்சாலைகளில் நட்ட நடுவே தயவு செய்து ஓட்ட வேண்டாம். இடது பக்கமாகவே செல்லுங்கள், வாகனங்களை முந்தும் போது இடது புறத்தில் முந்தாமல் வலது புறத்தில் ஏறி முந்தி மீண்டும் இடது புறமாக தொடர்ந்து உங்கள் பயணத்தை தொடருங்கள்.

காரில் செல்பவர்கள் மிரர் பார்த்து ஒட்டுவது அவசியம். உங்களை முந்த யாரும் சைட் கேட்டால் கொடுப்பதால் நாம் ஏதும் குறைந்து விடுவது இல்லை. வளைவில் முந்தாதீர்கள், ஊருக்குள் HI BEAM போட்டு ஒட்டாதீர்கள். கண்ணை கூசும் அளவிற்கு வாகனத்தின் முகப்பு விளக்கை மாற்ற வேண்டாம். எதிரில் வாகனம் வரும் போது விளக்கை அணைத்து போடுங்கள். நெடுந்தொலைவு பயணத்தில் தூக்கம் வந்தால் வண்டியை ஒரு டீக்கடை பக்கம் ஒதுக்கி போட்டு கொஞ்சம் கண் அசந்து பிறகு கிளம்புங்கள். தூக்கத்தை துறந்து துக்கத்தை துரத்தனுமா சொல்லுங்கள்?

பஸ், லாரி, ஆட்டோ இவர்கள் வாகனத்தை தான் தோன்றித்தனமாக எங்கும் நிறுத்தாமல் இருந்தால் அதுவே போதுமானது.

சாலை பாதுகாப்பு என்பது நம்மை நாம் முதலில் பாதுகாப்பதும், நம்மால் பிறருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் பாத்து கொள்வதுமே ஆகும். சாலையின் விதிகளை மதிப்போம், நான் ஒருவன் மட்டும் மதித்தால் போதுமா என்று பேசுவதை விட முதலில் நாம் கடைப்பிடிப்போம் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் வரும்.

வேகம் முக்கியம் அட ஆமாங்க வி"வேகம்" ரொம்ப முக்கியம். கவனமாக இருங்க.

தொடர்புடைய பதிவு : அவைநாயகன்

Monday, October 11, 2010

கம்பனும் விசிஷ்டாத்வைதமும்

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு ஆய்வரங்க அமர்வுகள்

பொருண்மை : ஒப்பிலக்கியம்
தலைப்பு - "கம்பனும் விசிஷ்டாத்வைதமும்"
கட்டுரையாளர் - முனைவர். செல்லக்கிருஷ்ணன்
அரங்கம் - ஒளவை அரங்கம்
இடம் - கோயம்புத்தூர்
நாள் - 27.06.2010

பகுதி - 1



பகுதி - 2



பகுதி - 3



பகுதி - 4

Thursday, October 07, 2010

தமிழ் இலக்கியங்களில் பெண்மையின் மதிப்பீடுகள் - ஒரு பார்வை

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு ஆய்வரங்க அமர்வுகள்

பொருண்மை : பெண்ணியம்
தலைப்பு - "தமிழ் இலக்கியங்களில் பெண்மையின் மதிப்பீடுகள் - ஒரு பார்வை"
கட்டுரையாளர் - முனைவர். சரோஜினி செல்லக்கிருஷ்ணன்
அரங்கம் - மாமூலனார் அரங்கம்
இடம் - கோயம்புத்தூர்
நாள் - 24.06.2010

Friday, March 05, 2010

மட்டையடி உற்சவம் - நாகை

பொங்கல் அன்று நாகை ஸ்ரீ செளந்தர்யராஜ பெருமாள் கோவில் சென்ற போது நாளை மாலை மட்டையடி உற்சவம் உள்ளது தவறாமல் வந்து விடுங்கள் என்று கூற, ஏதோ ஒரு பதிவில் இதை பற்றி படித்தும், இது ஸ்ரீரங்கத்தில் மட்டும் தான் நடைபெறும் என்று நினைத்துக் கொண்டு இருந்ததும் ஞாபகத்தில் வந்தது. வீட்டில் இதை பற்றி கேட்கும் போது இவ்வளவு நாளாக இங்கு இருக்கிறாய், இது கூடவா தெரியாது என்று நம் அறியாமையை பதம் பார்த்த காரணத்தால் அதன் புராண கதையை கேட்க முடியாமல் போயிற்று. சரி எப்படியும் நாளை மாலை இந்த உற்சவத்தை தவறாமல் கண்டு விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

இதை பற்றிய புராணக் கதை மிக தெளிவாக அறியாத காரணத்தால் எனக்கு தெரிந்தவற்றை மட்டும் இங்கு. துலக்க நாச்சியார் காண நம்பெருமாள் சென்ற காரணத்தால் கோவம் கொண்டு தாயார் மீண்டும் வீட்டின் உள்ளே அனுமதிக்க மறுப்பதே இந்த மட்டையடி உற்சவத்தின் சாரம்சம். வாழை மட்டை கொண்டு அடிக்கப்படுகிறது. அழ்வார் வந்து சாமாதனம் செய்வதாகவும் தெரிகிறது.

மாலை நான் சிறிது தாமாதமாக சென்ற காரணத்தால் முழுமையாக காண முடியவில்லை. படங்களும் சரியாக அமையவில்லை. சலனப்படம் சிறிதே எடுக்க முடிந்தது.

நம்பெருமாள் துலக்க நாச்சியாரை காண செல்லும் புகைப்படம்


கோவிலுக்குள் செல்ல முயலும் புகைப்படம்


மட்டையடி கொடுத்து வாயில் மூடப்படும் புகைப்படம்


தாயாரும், நம்பெருமாள் இணைந்து காட்சி கொடுக்கும் புகைப்படம்


மேலே உள்ள படத்தில் மட்டையடி உற்சவத்தை பற்றிய புராண கதையை கோவில் பட்டாச்சாரியார்கள் விளக்கும் காட்சியையும் காணலாம்.

சலனப்படம்



புராணங்கள் எப்படி இருந்தாலும், இந்த உற்சவத்தை கோவில் அங்கத்தினர்கள் நடத்திய பாங்கு என்னை மிகவும் கவர்ந்தது, அத்தனை அழகு. ஒரு ஒழுங்குடன், மிகவும் நேர்த்தியாக அமைந்தது இருந்தது. திருநாகை அழகியாருக்கு நடந்த இந்த உற்சவம் ஒரு அழகியல் நிகழ்வு என்பதால் தான் இந்த பதிவு.

ஸ்ரீரங்க மட்டையடி உற்சவத்தை பற்றி மாதவிபந்தலில் வந்த பதிவு.

Thursday, March 04, 2010

ஹைத்தி - பூகம்பம்

ஏற்கனவே உணவு பஞ்சத்தாலும், உள்நாட்டு பிரச்சனைகளாலும், தொடர்ந்து அடித்த கடும் புயலாலும் (Hurricane) அவதிப்பட்டு வந்த ஹைத்தி, எட்டு வாரங்களுக்கு முன்பு ஏற்பட்டு கடுமையான பூகம்பத்தால் மிகவும் நிலைகுலைந்து போய் உள்ளது. என்னுடன் வேலை நண்பர்களின் நிலை அறியவே சில நாட்கள் பிடித்தது. இன்னுமும் அவர்கள் தங்க இடம் இல்லாமல் அலுவலக வளாகத்தில் தான் தங்கி வருகிறார்கள். எனக்கு கிடைத்த தகவல்படி ஒரே ஒரு இந்தியர் (என்னுடைய பழைய கம்பெனியில் தற்பொழுது வேலை செய்தவராம்) இடிபாடுகளில் சிக்கி இறந்து உள்ளார். வடமாநிலத்தை சேர்ந்தவர் அவர். அவர் குடும்பத்திற்கு உதவி தொகை அளிக்க மற்ற நண்பர்கள் முயன்று கொண்டு உள்ளார்கள். அதே போல் இங்கு இருந்தும் ஹைத்திக்கு பணம் திரட்டி அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார்கள். திரட்டும் பணி கிட்டதட்ட முடிந்து விட்டது, விரைவில் அனுப்பட்டும்.

உலகின் பல பகுதிகளில் இருந்து நிவாரணம் ஹைத்தி நாட்டிற்கு குவிந்த போதிலும் இன்னும் நிலைமை மோசமாக தான் உள்ளது அங்கு. ஐ.நா.வும், அதன் துணை அமைப்புகளும், பல தொண்டு நிறுவனங்களும் துரிதமாக செயல்பட்டதால் இடிபாடுகளில் சிக்கி இருந்த பலரின் உயிர்கள் காக்கப்பட்டது. போதுமான மருத்துவமனை வசதிகள் இல்லாதது தான் மிக பெரிய இடராக அங்கு இப்பொழுது நிலவி வருகிறது.

ஐ.நா, ஹைத்தி அரசு, உலக வங்கி, ஐரோப்பிய அமைப்பு ஆகியவற்றின் உதவியோடு மறுகட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இது வரை கிட்டதட்ட 40 % மக்கள் (5 லட்சம்) தற்காலிக குடியிருப்புகள் பெற்று உள்ளார்கள். இன்னும் 2.5 லட்சம் தார்பாய்கள் மற்றும் 25000 டெண்ட் வழங்குவதற்காக பணிகள் நடந்துக் கொண்டு இருக்கின்றது. கிட்டதட்ட 15 லட்சம் மக்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டு கொண்டு இருக்கின்றது.

விரைவில் மழை காலம் நெருங்குவதால் அதற்கு முன்பு தற்காலிக குடியிருப்புகளை அமைக்கப்பட வேண்டும் என்பது தான் தற்பொழுது இருக்கும் சவால். இது வரை தொற்று நோய்கள் ஏதுவும் பெரும் அளவில் பரவாமல் இருப்பது ஒரு வரம்.

ஹைத்தியில் இருந்த அலுவலக தலைமையகம், பூகம்பத்திற்கு முன்பு


பூகம்பத்திற்கு பின்பு


We are the World 25 - Haiti

25 வருடங்களுக்கு முன்பு மைக்கேல் ஜாக்சனால் ஆப்பிக்க நாடுகளுக்காக நிதி திரட்ட நடத்தப்பட்ட We are the World பாடல் மீண்டும் 80 இசை கலைஞர்களால் 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் அதை ரீக்கார்ட் செய்து உள்ளார்கள். ஹைத்தி நிவாரண நிதிக்காக இதை செய்து உள்ளார்கள். இதில் நம் ரஹ்மானின் பங்களிப்பு உண்டு. அந்த பாடல்....



மனம் இருப்பவர்கள் ஹைத்தி மக்களுக்கு தங்களால் முடிந்த உதவியை செய்யலாம். WFP மூலம் உதவ விரும்புவர்கள் இந்த சுட்டியை தொடரவும். WHO மூலம் உதவு இந்த சுட்டியை தொடரவும்.

வசந்தம் விரைவில் வீசட்டும்.